மீண்டும் யுத்தம் ஏற்பட்டால் அநுர அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர!

நாட்டில் மீண்டும் ஒரு யுத்தச் சூழ்நிலை உருவானால், அதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் போது சர்வதேச நாடுகளிடம் இருந்து, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு யுத்தத்தை நிறுத்துமாறு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

எனினும், அந்த அழுத்தங்களுக்குப் பணியாது அவர் உறுதியாக நின்று யுத்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். எனவே, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கான முழுப் பொறுப்பும் கௌரவமும் அதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கிய மஹிந்த ராஜபக்சவையே சாரும் என சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று இராணுவத்தினரை கௌரவிக்க அனுமதி மறுத்த அரசாங்கம் , புலிகளை நினைவேந்த அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் அல்கொய்தா பயங்கரவாதிகளையோ, இந்தியா ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பையோ அல்லது ஜெர்மனி ஹிட்லரையோ நினைவுகூர ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

அவ்வாறிருக்க, தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் இந்தத் தரம் தாழ்ந்த அரசியல் தேசியப் பாதுகாப்பிற்குப் பெரு அச்சுறுத்தலாகும்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறது எனச் சாடிய அவர், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சவை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அகற்றி, எவ்விதக் குற்றச்சாட்டும் இன்றி இந்த மாதத்தில் கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்துச் சென்று அவமதிப்பு செய்ய முற்பட்டுள்ளனர்.

யுத்தத்தின் போது உளவுத்துறையை வழிநடத்திய சுரேஷ் சலே, பிள்ளையான் மற்றும் பாதுகாப்புப் பிரதானிகள் போன்றோரை டயஸ்போராவைத் திருப்திப்படுத்துவதற்காகவே கைது செய்து பழிவாங்கியுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய்க்கு, மே 18 ஆம் திகதியை ‘தமிழ் இனப்படுகொலை நாளாக’ பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் உண்மை என்னவெனில், தமிழர்களைப் பேரழிவில் இருந்து காப்பாற்றியதே எமது இராணுவம்தான்.

யுத்தத்தின் இறுதித் தருணத்தில் பிரபாகரன் சுமார் 3 இலட்சம் அப்பாவித் தமிழ் மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியபோது, எமது இராணுவத்தினர் 2 இலட்சத்து 95 ஆயிரம் மக்களின் உயிர்களை மீட்டுத்தான் யுத்தத்தை வென்றனர். உலக வரலாற்றில் இத்தனை பணயக்கைதிகளை மீட்டு யுத்தத்தை வென்ற இராணுவம் எங்குமில்லை.

அன்று இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் போதோ, சிறுவர்களுக்கு ஒரு யோகட்டையோ அல்லது கண்ணிவெடிகளை அகற்றிய இராணுவத்தினருக்கு ஒரு தேநீரையோ வழங்க இந்தத் தமிழ் அரசியல்வாதிகள் யாரும் வரவில்லை.

இன்றுவரை வடக்கில் மக்களுக்கு இரத்தம் தேவைப்படும்போது இராணுவத்தினரே இரத்தம் வழங்குகிறார்கள். இத்தகைய துரோகத் தனமான அரசியல்வாதிகள் மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் செய்வதற்கும், அதற்கு இந்த அரசாங்கம் இடமளிப்பதற்கும் தனது கண்டனங்களை வெளியிடுவதாக அவர் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்