சிறுமி ஒருத்தி முள்ளம்பன்றிக் குட்டி ஒன்றுடன் வயல்வெளியில் நடந்து செல்லும் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைக் கவர்ந்து வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த வீடியோ வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என்றும், இது இலங்கையில் எடுக்கப்பட்ட வீடியோ என்றும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டிஸ்னி இளவரசி போன்ற நிஜக் காட்சி என நெட்டிசன்களால் வர்ணிக்கப்படும் இந்த வீடியோ, வங்கதேசத்தைச் சேர்ந்தது எனக் குறிப்பிட்டு பல சர்வதேச ஊடகங்களும் (தி டெலிகிராப் உட்பட) செய்திகளை வெளியிட்டிருந்தன.

எனினும், இந்த வீடியோ இலங்கையில் படமாக்கப்பட்டது என்பதை இலங்கையை சேர்ந்த ஆங்கில ஊடகமொன்று ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ முதன்முதலில் கடந்த ஜூன் 11ஆம் தேதி இலங்கையைச் சேர்ந்த ஃபேஸ்புக் பயனர் ஒருவரால் சிங்கள மொழியிலான தலைப்புடன் பதிவேற்றப்பட்டுள்ளது. அதன் பின்னர், அதே கணக்கில் அந்தச் சிறுமியும் முள்ளம்பன்றியும் இருக்கும் மேலும் பல வீடியோக்கள் சிங்களக் குறிப்புகளுடன் பகிரப்பட்டுள்ளன.
குறித்த ஃபேஸ்புக் கணக்கின் இருப்பிடம் இலங்கையின் பொலன்னறுவை (Polonnaruwa) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது இதன் உண்மைத் தன்மைக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
அதேவேளை, வங்கதேசத்தைச் சேர்ந்த ‘Stream’ என்ற உண்மை கண்டறியும் (Fact-checking) அமைப்பும் இந்த வீடியோவை ஆராய்ந்து, இது வங்கதேசத்து வீடியோ அல்ல, இலங்கையில் எடுக்கப்பட்டதுதான் என்பதை சுயாதீனமாக உறுதிப்படுத்தியுள்ளது.
உலகளவில் பல மில்லியன் பார்வைகளைக் கடந்து, பார்ப்பவர் மனதை நெகிழச் செய்து வரும் இந்த இலங்கைச் சிறுமி மற்றும் முள்ளம்பன்றியின் அழகான நட்பு, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது.
