நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பயங்கர வன்முறைச் சம்பவத்தில், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்தியாவின் பிரபல ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73 வயதுடைய இந்தியக் குடிமகனே இவ்வாறு வன்முறையின் போது பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலையும் ஊடகங்களுக்கு வௌியாடவில்லை. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்தியத் தரப்பிலிருந்து அவசர அறிக்கையொன்று அனுப்பபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அவ்வாறானதொரு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளமையை இலங்கையின் நம்பத்தகுந்த அரச வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளதாக ‘தி ஹிந்து’ நாளிதழ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடுத்தடுத்து இடம்பெற்ற இருவேறான வன்முறைச் சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 28 ஆக அதிகரித்துள்ளது என சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சிறைச்சாலையில் நிலவும் கடுமையான கைதிகள் நெரிசல் நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கோடும், மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும் அங்குள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த 1,200 கைதிகள் உடனடியாக ஏனைய மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய இந்தியக் கைதிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு வெவ்வேறு சிறைகளுக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சிறைச்சாலைத் திணைக்களமும் பொலிஸாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
