கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். தொற்றுக்குள்ளானவர்களில் 5 மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் தங்கியிருந்து தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கலைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் கல்விச் செயல்பாடுகளைப் பாதிக்காத வண்ணம் ஒரு வார காலத்திற்குப் பல பீடங்களின் விரிவுரைகளை மாத்திரம் இணையவழி மற்றும் கலப்பு முறையில் (Online and Hybrid mode) முன்னெடுப்பதற்குப் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரசபை தீர்மானித்துள்ளது. டெங்கு நோய் தொற்றின் போது மாணவர்களுக்கு ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒன்று என்பதால், இந்தத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் துணைவேந்தர் சுட்டிக்காட்டினார்.

டெங்கு பரவலுக்கு மத்தியில், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்கலைக்கழகத்தினால் பல சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் உடல்நிலை குறித்தும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது பல்கலைக்கழகத்திற்குள் நிலவும் சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட துணைவேந்தர், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டால், தயவுசெய்து தாமதிக்காமல் அதற்குரிய மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு மாணவர்களிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இந்தச் சூழ்நிலையில் எந்தவொரு வகையிலும் பல்கலைக்கழகம் மூடப்படவில்லை என்பதை வலியுறுத்திய துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க, அவ்வாறு பல்கலைக்கழகத்தை முழுமையாக மூடும் எண்ணம் எதுவும் நிர்வாகத்திற்கு இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
