இறுதி யுத்தத்தின் போது தமிழீழ வைப்பகங்களில் இருந்து இலங்கை ராணுவத்தால் எடுத்துச் செல்லப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள தமிழ் மக்களின் நகைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தற்போதைய அரசாங்கம் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பணத்தூயதாக்கல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கம் கொள்ளையடித்த தமிழ் மக்களின் சொத்துக்களை மீட்டெடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்க தற்போதைய நேர்மையான அரசாங்கத்திற்கு என்ன தடை இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

தமிழீழ வைப்பகங்களில் இருந்து கன்டெய்னர் பெட்டிகளில் எடுத்துவரப்பட்ட தமிழ் மக்களின் நகைகள், தற்போதும் உகாண்டாவில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் தூயதாக்கப்பட்டு பேணி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். கோட்டபாய, மகிந்த மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் ‘கேபி’ ஊடாக பறிமுதல் செய்த தமிழ் மக்களின் சொத்துக்களைப் பல நாடுகளில் முதலீடு செய்துள்ளனர் என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே பல நேர்காணல்களில் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த மற்றும் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தருமாறு யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 816 பேர் தன்னிடம் விண்ணப்பித்துள்ள நிலையில், முந்தைய அரசுகள் இந்த நகைகளைத் தருவதாகக் கூறிவிட்டு, தற்போது ‘அரசாங்க நிதிக்கு மாற்றப்படும்’ என மாற்றிப் பேசுவது அநீதியானது என்றும் அவர் சாடினார்.
அதேபோல், சட்டப்பூர்வமாக வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் (TRO) நிதியை கடந்த அரசாங்கம் பகல் கொள்ளையடித்து முடக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், அந்த நிதியை உடனடியாக விடுவித்து வடக்கு-கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் என்றார். மேலும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும் வடமராட்சி கிழக்கு, மயிலட்டி, பலாலி, கேப்பாபுலவு ஆகிய பகுதிகளில் தமிழ் மக்களின் நிலங்கள் ராணுவத்திற்காக அளவீடு செய்யப்படுவதும், மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடுவதும் தொடர்கதையாகவே உள்ளது என்று கவலை வெளியிட்டார். எனவே, புதிய அரசாங்கம் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில், மாவட்ட ரீதியாகப் பட்டியல் தயாரித்து தமிழ் மக்களின் நகைகளையும், முடக்கப்பட்ட நிதியையும் உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சி. சிறீதரன் தனது உரையில் வலியுறுத்தினார்.
