பாடசாலைச் சிறுமிகள் மற்றும் ஆன்மீகத்தை நம்பிச் செல்லும் சிறுமிகளை சில மத நிறுவனங்களை நடத்துபவர்களும் மதத்தலைவர்களும் கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்து வரும் சம்பவங்கள் அண்மைக்காலமாக கொழும்பு, அனுராதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகரித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் கவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ‘ஒவ்வொரு பாடசாலைக்கும் பயிற்றப்பட்ட உளவள ஆலோசகர் ஒருவரை நியமித்தல்’ தொடர்பான தனியார் உறுப்பினர் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மதத்தலைவர்கள் தவறிழைக்கும் பட்சத்தில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை மீறும் வகையில் செயல்பாடுகள் அமைந்துள்ளன என அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் பேசுகையில்:
“பிக்குகள் தவறிழைத்தால் அவர்களுக்கு எனத் தனியான நீதிமன்றத்தை அமைப்போம் என்று ஜனாதிபதி கூறுகிறார். இது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதியைத் தள்ளி வைக்கும் ஒரு செயல்பாடாகும். தவறிழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
கொரோனா காலகட்டத்திற்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Zoom’ வழியிலான கல்வி முறையினால், மாணவர்கள் கைத்தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் YouTube, Facebook, WhatsApp போன்ற சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகரித்து, மாணவர்களிடையே பாரிய கவனச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்வியில் மாணவர்களின் ஆர்வம் மற்றும் அடைவுமட்டங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாணவர்கள் மட்டுமன்றி, தற்போதைய நவீன டிஜிட்டல் உலக நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையும் காப்பாற்ற முறையான உளவள ஆலோசனை அவசியம் என்று சிறீதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை மூத்த பேராசிரியர் சபா ஜெயராஜா அவர்களின் உளவியல் பங்களிப்பை நினைவுகூர்ந்த அவர், வெறும் பாடசாலை ஆலோசகர் நியமனத்துடன் நிற்காமல், ஒவ்வொரு கல்வி வலயத்திற்கும் ஒரு ‘உளவள உதவி கல்வி பணிப்பாளர்’ நியமிக்கப்பட்டு இதற்கெனத் தனியான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
