முல்லைத்தீவு மாவட்டம், முல்லைத் தேராவில் தமிழ் வித்தியாலய மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் முகமாகவும், எதிர்காலத் தேவைகளுக்கு அமைவாக அவர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கிலும் விசேட அறிவூட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இன்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் (CFCD) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, பிரித்தானியாவின் ‘Child First (UK)’ அமைப்பு நிதிப் பங்களிப்பினை வழங்கியிருந்தது.

தற்போதைய நவீன தொழில் நுட்ப உலகில் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள், அதற்காகத் தம்மைத் தயார்படுத்தும் வழிமுறைகள் மற்றும் எதிர்காலக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து இதன்போது மாணவர்களுக்குத் தெளிவான அறிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, Child First (UK) அமைப்பின் நிதி உதவியுடன், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையமானது (CFCD) குறித்த பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய முக்கிய பாடங்களுக்கான மாலை நேர வகுப்புகளைத் தொடர்ச்சியாக நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
