துபாயின் தங்க வர்த்தகம் மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், உலகின் முக்கியத் தங்க வர்த்தக மையமான துபாயிலிருந்து தங்கம் வெளியேறுவது மற்றும் உள்ளே வருவது (Gold flows) பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், சரக்குக் போக்குவரத்து விமானங்கள் நிறுத்தப்பட்டதாலும் இந்தத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, ஈரான் வான்பரப்பில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, துபாய் வழியாகச் செல்லும் மற்றும் துபாயிலிருந்து புறப்படும் நூற்றுக்கணக்கான சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், சில விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளின் இந்தத் தாக்குதல், பிராந்தியத்தில் மிகப்பெரிய ஸ்திரமற்ற நிலையை உருவாக்கியுள்ளது.
தொடர்ச்சியாக, இது உலகளாவிய எரிசக்தி மற்றும் உலோகச் சந்தைகளில் (Energy and Metal markets) உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், தங்க விநியோகம் தடைபட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிரடியாக உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாகச் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கான தங்கம் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
