முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக உதவத் தயாரென பிரதான இரண்டு நாடுகள் உறுதிமொழி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மஹிந்த பயன்படுத்திய புல்லட் ப்ரூவ் எனப்படும் குண்டுகள் துளைக்காத வாகனங்களை அரசாங்கம் மீளப்பெற்றுள்ள நிலையில், அப்படியான வாகனங்களை மஹிந்தவுக்கு வழங்க முடியுமென இரு நாடுகள் மஹிந்தவிடம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இராஜதந்திர சிறப்புரிமைகளைப் பயன்படுத்தியா அல்லது நன்கொடையாக வழங்கும் அடிப்படையிலா இந்த உதவி வழங்கப்படவுள்ளதென்பது பற்றி இன்னும் தெரிய வரவில்லை.
எவ்வாறாயினும் சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளின் தூதுவர்கள் இது தொடர்பில் மஹிந்தவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு மஹிந்த தரப்பிலிருந்து இதுவரை பதில் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபருடன் அடுத்த வாரம் சந்திப்பொன்றினை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாகனங்களை அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளதால், அவருக்கு பாதுகாப்பு வழங்குவதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ கமகே கூறியுள்ளார்.