அசைவ உணவுகளை, குறிப்பாக கோழி இறைச்சி விரும்பி சாப்பிடுபவர்கள், இனிமேல் சிறிது கவனமாக இருக்க வேண்டியுள்ளது. இத்தாலியில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், வாரத்திற்கு நான்கு முறை அல்லது அதற்கு மேல் கோழி சாப்பிடுவோருக்கு இரைப்பை புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு ‘நியூட்ரியண்ட்ஸ்’ என்ற மருத்துவ இதழில் வெளியானது. இதில் 4000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களின் உணவு பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் சுகாதார வரலாறு பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
ஆய்வில் குறிப்பிடப்பட்ட முக்கியமான விஷயம் என்னவென்றால், வாரத்திற்கு 300 கிராம் கோழி இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு, 100 கிராமுக்கு கீழ் சாப்பிடுபவர்களை விட 27% அதிக இறப்பு அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆண்கள் இந்த ஆபத்துக்கு இருமடங்கு அதிகம் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கோழி இறைச்சி சமைக்கும் போது உருவாகும் மியூட்டஜென்கள் என்ற வேதிப்பொருட்கள், டிஎன்ஏ பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தலாம். அதேபோல், கோழி வளர்க்கப் பயன்படும் ஹார்மோன்கள், பூச்சிக்கொல்லிகள் போன்ற இரசாயனங்களும் புற்றுநோய் அபாயத்தை தூண்டும்.
ஆண்களுக்கு அதிக ஆபத்து ஏற்படுவதற்கான காரணம் தெளிவாகவில்லை என்றாலும், ஹார்மோன் வேறுபாடுகள், குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் உள்ள மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர்.
இது போன்ற அறிக்கைகள் நமக்கு உணவுப் பழக்கங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தும். கோழி இறைச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை என்றாலும், அதிகபட்ச அளவை கட்டுப்படுத்துவது பாதுகாப்பானது என்பதே நிபுணர்களின் ஆலோசனை.