முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் (Deshabandu Tennakoon) நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் உயர்நீதிமன்றம் இன்று (12) இந்த தீர்மானித்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வழக்குகளுடன் தொடர்புடையதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த சத்தியக்கடதாசியில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டும், மனுதாரர் தரப்பின் இணக்கத்துடனும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதேவேளை தேசபந்து தென்னகோனின் நியமனத்திற்கு எதிராக ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
