இலங்கைக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை (Refined Fuel) வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் தலைமையிலான தூதுக்குழுவினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய எரிபொருள் தேவையை கருத்திற்கொண்டு, தட்டுப்பாடின்றி சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை வழங்குவதற்கு ரஷ்ய பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இடைத்தரகர்கள் இன்றி அரச மட்டத்திலான நேரடி உடன்படிக்கைகளின் ஊடாக எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
எரிபொருள் விநியோகம் மாத்திரமன்றி, இலங்கையின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் ரஷ்யா தனது ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
