யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று(21.05.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கு தொடுநர் தரப்பில், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகியிருந்த அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன், அதிகரித்து வரும் போதை பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்க வேண்டும் என சமர்ப்பனங்களை மேற்கொண்டு இருந்த நிலையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட பல வருடங்கள் கடக்கும் இந்த காலத்தில் மிக குறுகிய காலத்தில் யாழ். நீதிமன்றில் வழக்குகள் முடிக்கப்பட்டு குற்றவாளிகள் மீண்டும் குற்றம் செய்ய நினைக்க பயம் கொள்ளும் வகையில், தண்டனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
