முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலங்கம பொலிஸாரால் சற்றுமுன்னர் ( 25) கைது செய்யப்பட்டுள்ளார்.
போர் வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் இன்று காலை அவர் முன்னிலையாகியிருந்தார்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் அவர் கைது செய்ய்ப்பட்டுள்ளார்.
கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவுத்தூபியில் போர் வெற்றி நாள் இறுதி ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது வீரவன்ச தலைமையிலான சுமார் 35 பேரடங்கிய குழுவினர் சென்று கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருடன் முரண்பட்டிருந்தனர்.
இதன்போது மே 19ஆம் திகதி நடைபெறவிருந்த போர் வெற்றி நாள் ஒத்திகை நடவடிக்கைகளுக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கும் இடையூறு விளைவித்து, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் பலவந்தமாக நுழைய முயன்ற நிலையில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.
பதற்றமான சூழ்நிலை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றைய தினம் தலாங்கம பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு வீரவன்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்ய்ப்பட்டுள்ளார்.
