நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 19 கைதிகள் மற்றும் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார நாடாளுமன்றத்தில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
திட்டமிட்ட போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலே இதற்கு காரணம் எனத் தெரிவித்துள்ள அமைச்சர், உண்மை நிலையை கண்டறிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதல்களில் கைதிகள் மற்றும் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய நீதி அமைச்சர்,
இந்தச் சம்பவத்தில் 7 சிறைச்சாலை அதிகாரிகளும் 19 கைதிகளும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தினார். அத்துடன், 23 சிறைச்சாலை அதிகாரிகளும் 54 கைதிகளும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அமைச்சர், இச்சம்பவத்தின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றக் குழுக்களின் சதி உள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
சிறைச்சாலை நிர்வாகத்திற்கு இரகசியத் தகவல்களை வழங்கிய கைதிகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த நீதி அமைச்சர்
“இது ஒரு பாரதூரமான மனிதப் பேரவலம். சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக நாம் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தியிருந்தோம். நிர்வாகத்திற்குத் தகவல் வழங்கிய கைதிகளே முதலில் தாக்கப்பட்டனர். இந்த வன்முறையின் போது, திட்டமிட்ட முறையில் பல மில்லியன் பெறுமதியான அதிநவீன ஸ்கேனர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை பாதுகாப்பு கட்டமைப்பை அடியோடு முடக்குவதே இவர்களின் நோக்கமாக இருந்துள்ளது.”
இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் பிரியந்த பெர்ணாண்டோ , ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் வீரகோன் மற்றும் மிலிந்த குணதிலக்க ஆகியோரை உள்ளடக்கிய விசேட அமைச்சரவைக் குழுவொன்று ஜனாதிபதி செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் சிறைச்சாலைத் திணைக்களம் ஆகியன தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்படுவதைத் தடுப்பதற்கான அவசரக் கலந்துரையாடல் ஒன்றிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
