நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட வன்முறை மோதலைக் கட்டுப்படுத்தச் சென்ற போது கொடூரமான தாக்குதல்களுக்கு இலக்காகி உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்கள், இன்று (08) காலை வாகனப் பேரணி மூலம் வெலிக்கடை சிறைச்சாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. குறித்த அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர், உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

கடந்த 5 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலைமை தணிவடைந்ததைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை (06) காலை கைதிகளுக்கு உணவுகளை வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். அச்சமயத்தில் கைதிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளதுடன், அதனைத் தடுத்து நிறுத்தச் சென்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மீது கற்களால் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவ்வேளையில் பல்லன்சேன சிறைச்சாலைக்கு புதிய நியமனம் பெற்று வந்திருந்த பிரதான ஜெயிலரும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கு வருகை தந்திருந்தார். அவர் மீது கைதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கிய போது ஏனைய அதிகாரிகளால் அவர் காப்பாற்றப்பட்ட போதிலும், நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற ஏனைய அதிகாரிகள் மீது கைதிகள் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். சில அதிகாரிகளின் தலை மீது பெரிய கற்களைப் போட்டு கைதிகள் தாக்கியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கைதிகளின் இந்தத் திட்டமிடப்பட்ட கொடூரத் தாக்குதல்களுக்கு இலக்காகி 7 சிறைச்சாலை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். எவ்வாறாயினும், கைதிகளுக்கு இடையிலான இந்தத் தீவிர மோதலில் மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
