டாக்கா அருகே உள்ள நாராயண்கஞ்ச் பகுதியில், எதிர்வரும் தியாகத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு இயங்கி வரும் கால்நடைப் பண்ணைகளில் உள்ள இரண்டு வெள்ளை நிற எருமை மாடுகள் பொதுமக்களிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை இந்த எருமைகள் ஒத்திருப்பதாகக் கூறி, அவற்றைக் காண தினமும் ஏராளமான மக்கள் பண்ணைகளில் குவிந்து வருகின்றனர்.

700 கிலோ எடை கொண்ட இந்த வெள்ளை நிற எருமைக்கு, அதன் தலையில் உள்ள தங்க நிற முடிகள் மற்றும் முக அமைப்பை வைத்து ‘டொனால்ட் ட்ரம்ப்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் என்ற பெயரைப் பெற்றிருந்தாலும், இந்த எருமை மிகவும் அமைதியான குணம் கொண்டது என்று அதன் உரிமையாளர் ஜியாவுதீன் மிருதா தெரிவித்துள்ளார்.
மற்றொரு பண்ணையில் உள்ள 750 கிலோவிற்கும் அதிக எடையுள்ள வெள்ளை நிற எருமைக்கு ‘பெஞ்சமின் நெதன்யாகு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதன் கண் மற்றும் முடி அமைப்பு இஸ்ரேல் பிரதமரை ஒத்திருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
‘ட்ரம்ப்’ எருமைக்கு நேர்மாறாக, இந்த எருமை மிகவும் ஆக்ரோஷமான மற்றும் பிடிவாத குணம் கொண்டதாக உள்ளது.
உணவளிக்கச் செல்லும் போது கூட முட்ட வருவதாக பண்ணை மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசித்திரமான எருமைகளுடன் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்க தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பண்ணைகளுக்கு வருகை தருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
