இலங்கையின் முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில், சீனா கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் அமைத்திருந்த பிரத்தியேகப் பண்டக சாலைகள் (Bonded Warehouses) இலங்கையின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உடனடி மற்றும் தீர்க்கமான பங்களிப்பை வழங்கியதாக இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார் என தென்னிலங்கை ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் இந்த அசாதாரண இராணுவ ஆதரவு குறித்து அவர் விவரிக்கும் போது, அது ஒரு “ஆயுத சூப்பர் மார்க்கெட்” போல செயல்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கடிதம் ஒன்றை எடுத்துக்கொண்டு, ஒரு ஷாப்பிங் பட்டியலை ஏந்திச் செல்வது போல நாங்கள் அங்கு செல்ல முடியும். தேவையான ஆயுதங்களை உடனடியாகச் சேகரித்து, போரில் பயன்படுத்திவிட்டு, அதற்கான தொகையை பின்னர் செலுத்தக்கூடிய ஒரு பிரத்தியேக வசதியை சீனா செய்திருந்தது,” என்று கொலம்பகே விவரித்துள்ளார்.
2006 முதல் 2009 வரையிலான காலகட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, உக்ரைன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் இருந்து இலங்கை உதவிகளைப் பெற்ற போதிலும், பல நாடுகள் கொடிய ஆயுதங்களை (Lethal Weapons) வழங்க மறுத்துவிட்டன அல்லது கடுமையான தடைகளை விதித்திருந்தன. சில நாடுகள் போர்க்கப்பல்களை வழங்கினாலும் அவற்றுக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கவில்லை.
ஆனால், சீனா எவ்வித நிபந்தனையுமின்றி பீரங்கிகள், மோட்டார்கள், ராடார்கள், கவச வாகனங்கள், போர் விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை வழங்கி இலங்கையின் முதன்மை பாதுகாப்பு பங்காளியாக மாறியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2009 மே 19 இற்குப் பிறகு நாட்டில் அமைதி திரும்பிய சூழலில், மேற்கத்திய நாடுகள் முதலீடு செய்ய முன்வராததால் ஏற்பட்ட பெரும் உள்கட்டமைப்பு வெற்றிடத்தை சீனா மிக வேகமாகப் பயன்படுத்திக் கொண்டது.
போர்க்காலத்தில் ஆயுதங்களை விநியோகிப்பதற்காக இலங்கையில் ஏற்கனவே அலுவலகங்களையும் தளங்களையும் அமைத்திருந்த சீன அரசு நிறுவனங்கள், போர் முடிந்த அடுத்த கணமே தங்களை உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான நிறுவனங்களாக மாற்றிக்கொண்டன. இதன் விளைவாகவே தெற்கு அதிவேக நெடுஞ்சாலை (2011), நுரைச்சோலை மின்நிலையம் (2011), கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (2011) மற்றும் மத்தள விமான நிலையம் (2013) போன்ற பாரிய திட்டங்கள் சீனாவால் மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டன என்று அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
