இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பான ‘தமிழ்த் தேசியப் பேரவை’யினர் இன்று சென்னையில் முக்கியச் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.
தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான 7 பேர் கொண்ட உயர் மட்டப் பிரதிநிதிகள் குழு, தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், எழுத்துப்பூர்வமான கோரிக்க மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளது.

ஈழத்தமிழ் மக்கள் தற்போது தாயகத்தில் எதிர்கொள்ளும் மிக முக்கியமான அரசியல் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இச்சந்திப்பில் ஆழமாக விவாதிக்கப்பட்டது.
சமஷ்டி அடிப்படையிலான தீர்வு: இலங்கையின் தற்போதைய ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை முற்றாக ஒழிக்கப்பட்டு, தமிழர் தேசத்தின் இறையாண்மையை அங்கீகரிக்கும் வகையிலான ‘சமஷ்டி’ (Federal) முறையிலான அரசியல் தீர்வின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
சர்வதேச விசாரணை: ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழினவழிப்பிற்குச் சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கடற்தொழிலாளர் பிரச்சினை: இந்திய மற்றும் ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களுக்கு இடையே நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தொப்புள்கொடி உறவு அடிப்படையில் நிலையான, சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும்.
அகதிகள் மறுவாழ்வு: இந்தியாவில் நீண்டகாலமாகத் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் குடியுரிமை மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் சென்னைக்கு வருகை தந்துள்ள இக்குழுவில் கீழ்க்கண்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடம்பெற்றிருந்தனர்:
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – தலைவர், தமிழ்த் தேசியப் பேரவை (நாடாளுமன்ற உறுப்பினர்).
செல்வராசா கஜேந்திரன் – பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்).
பொன்னுத்துரை ஐங்கரநேசன் – தலைவர், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்.
கே. வி. தவராசா – தலைவர், ஜனநாயகத் தமிழர் கட்சி (ஜனாதிபதி சட்டத்தரணி).
தருமலிங்கம் சுரேஷ் – தேசிய அமைப்பாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.
கனகரட்ணம் சுகாஷ் – உத்தியோகபூர்வ பேச்சாளர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி.
நடராஜர் காண்டீபன் – கொள்கைப் பரப்புச் செயலாளர் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி.
ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதிலும், தமிழக-ஈழத்தமிழர் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் இச்சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
