கொழும்பு – கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகர்த்தாக்கள் வழங்கிய தாராளமான தனிப்பட்ட நிதியுதவி மூலம் திருடப்பட்ட புனித நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன.

ஆலயத்தின் பிரதான குருக்களாக கடமையாற்றிய சதீஸ்குமார குருக்கள் என்பவரே நகைப்பெட்டகத்தின் சாவியைப் பயன்படுத்தி இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளார். திருடப்பட்ட நகைகளை கொட்டாஞ்சேனைப் பகுதியில் உள்ள சி.டி.பி வங்கி, விமல் அடகு நிறுவனம் மற்றும் எஸ்.எம்.பி நிறுவனம் ஆகியவற்றில் அடகு வைத்து, மொத்தமாகப் பெற்ற சுமார் 2 கோடியே 67 இலட்சம் ரூபாயையும் அவர் சூதாட்டத்தில் இழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய உற்சவத்திற்காக நகைப்பெட்டகத்தைத் திறந்தபோதே இந்தத் திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
ஆலயத்தின் புனிதத்தையும் பக்தர்களின் நம்பிக்கையையும் காக்கும் நோக்கில், தர்மகர்த்தாக்களான ஏ.எம்.ரி. தனநாயகம் மற்றும் திருக்குமாரன் நடேசன் ஆகியோர் தலா 12.4 மில்லியன் ரூபாவைத் தமது சொந்த நிதியிலிருந்து நன்கொடையாக வழங்கினர். இதன் மூலம் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் அனைத்தும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தற்போது தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான சதீஸ்குமார குருக்களுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், சந்தேகநபரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
