2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை வழங்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நவம்பர் 6 ஆம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனுக்கள் நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சலா வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட்டுள்ளன.

அதன்போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை முன்வைத்து, வழக்கின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பெற நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆனதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக மேல்முறையீட்டு விசாரணைக்கு குறுகிய திகதி வழங்குமாறு பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இந்த மேல்முறையீடுகளை விரைவாக விசாரிக்க குறுகிய திகதி வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.
அதன்படி, தொடர்புடைய மேல்முறையீட்டை நவம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு கூட்டுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
2015 மார்ச் 3 ஆம் திகதி பாடசாலையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது சிவலோகநாதன் வித்யா என்ற 18 வயது பாடசாலை மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக “சுவிஸ் குமார்” உட்பட 07 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
தங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என்றும், எனவே தங்களை விடுதலை செய்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கூறி, பிரதிவாதிகள் தங்கள் சட்டத்தரணிகள் மூலம் உயர் நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.