இலங்கையின் நகர்ப்புற வாகன நிறுத்தப் பிரச்சினைகளுக்கு அதிநவீன தீர்வாக, நாட்டின் முதலாவது ‘சுழலும் வாகன நிறுத்துமிட அமைப்பு’ (Rotary Car Parking System) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹெய்லீஸ் குழுமத்தின் (Hayleys Group) துணை நிறுவனமான ஹெய்லீஸ் அவென்டுரா (Hayleys Aventura) இந்த அதிநவீன திட்டத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் அங்குரார்ப்பண விழா அண்மையில் நடைபெற்றது. இதில் ஹெய்லீஸ் குழுமத்தின் தலைவர் மோகன் பண்டிதகே மற்றும் இணைத் தலைவர் தம்மிக பெரேரா ஆகியோர் கலந்துகொண்டு இத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

மிகவும் குறைந்த நிலப்பரப்பில், அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். செங்குத்தாக சுழலும் (Vertically Rotating) ஒரு கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த அமைப்பில், வாகனங்கள் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழற்சி முறையில் நகர்த்தப்பட்டு நிறுத்தப்படுகின்றன. இதனால், வாகனங்களை நிறுத்துவதற்கும், மீண்டும் எடுப்பதற்கும் மிகக் குறைந்த நேரமே எடுக்கிறது.
வேகமாக வளர்ந்து வரும் கொழும்பு போன்ற நவீன நகரங்களுக்கு இதுவொரு மிகச்சிறந்த தீர்வாக அமையும் என ஹெய்லீஸ் அவென்டுரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வாகன நிறுத்துமிட அமைப்பில், வாகனங்களை நிறுத்துவதற்கும், மீண்டும் பெறுவதற்கும் அதிநவீன ‘முக அங்கீகாரத் தொழில்நுட்பம்’ (Facial Recognition Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நிறுத்தப்படும் வாகனங்களின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேம்படுத்தப்பட்ட சென்சார் அடிப்படையிலான (Sensor-based) பாதுகாப்பு வழிமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் நகர்ப்புறங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசல் மற்றும் இடப்பற்றாக்குறை ஆகிய சவால்களுக்கு இந்த புதிய தொழில்நுட்பம் ஒரு நடைமுறைச் சாத்தியமான மற்றும் திருப்திகரமான தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
