தேசிய போர் வீரர் நினைவுத்தூபி அருகே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
போர் வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்த மேற்கொண்ட முயற்சி தொடர்பில் வழக்கு தொடரப்படுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
“போர் வீரர்களை நினைவு கூருவதற்கும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் இடையூறு விளைவிக்கப்பட்டால், அது குறித்து வழக்குத் தொடரப்பட்டால் அதனை எதிர்கொள்ள நாங்கள் ஒருபோதும் தயங்கமாட்டோம்” என்று குறிப்பிட்டார்.
