இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத் தமிழர்கள் அரசியல் மற்றும் வாழ்வுரிமைக்காக பல தசாப்தங்களாகப் போராடி வந்த நிலையில், தமிழர் ஒற்றுமையின்மையும் சகோதர யுத்தங்களும் தமிழினத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சூழலில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை குறிவைத்து, “ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்” எனக் கொலை மிரட்டல் விடுத்து பேசியிருப்பது ஜனநாயக அரசியல் பண்புகளுக்கு முரணானது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்த் தேசிய அரசியல் வளர்ச்சியை தடுக்கும் நோக்கில் தமிழர் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலான அரசியல் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
அத்துடன், அண்டை நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு பேசியிருப்பதை சம்பந்தப்பட்ட அரசுகள் கவனிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இராமநாதன் அர்ச்சுனா தனது கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, சீமான் மற்றும் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
