தமிழக சட்டசபை கூட்டத்தின் இரண்டாவது நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு இடம்பெற்றது.
சபாநாயகர் தேர்தலில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்ற ஜே.சி.டி. பிரபாகர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
அதேவேளை, சட்டசபை துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர், புதிதாக தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பின்னர் உரையாற்றிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், கட்சி சார்பின்றி செயல்பட்டு அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்குவேன் என உறுதியளித்தார்.

மேலும், அவையின் மாண்புகளைக் காக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து தரமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அரசியல் மோதல்களுக்காக மக்கள் தங்களை அவைக்கு அனுப்பவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் விஜய்யை மக்கள் “இன்னொரு எம்.ஜி.ஆர்.” ஆக பார்க்கிறார்கள் என கூறினார்.
தேர்தலில் “விஜய் அலை”, “வெற்றி அலை”, “விசில் அலை” வீசியதாகத் தெரிவித்த அவர், சாதி, இனம் பாராமல் மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், “போதையில்லா தமிழ்நாடு” உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த சபாநாயகர், பல பிரச்சினைகள் வந்தபோதும் போராட்டங்களை தவிர்த்து அமைதிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் என பாராட்டினார்.
தமிழக வெற்றிக் கழகம் புதிய சக்தியாகவும் புரட்சியாகவும் உருவெடுத்துள்ளதாகவும், சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விஜய்யால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருப்பதாகவும் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
