தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தி வெளியிட்டதுடன், அது தொடர்பாகக் கேள்வியெழுப்பியுள்ளது.

அரசாங்கத்தின் இராஜதந்திர நடைமுறைகள் மற்றும் முன்னுதாரணங்கள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:
ஒரு நாட்டின் அரச தலைவர் , மற்றுமொரு நாட்டின் அரச தலைவருக்கே பொதுவாக வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறுவது வழக்கம் என ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
வெளிநாடொன்றின் மாநில அல்லது மாகாணத் தலைவர்களுக்கு நாட்டின் ஜனாதிபதி நேரடியாக வாழ்த்துத் தெரிவிப்பது இராஜதந்திர மரபுகளை மீறும் செயல் என அந்த கட்சி விசனம் தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி, இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற ஏனைய மாநில முதலமைச்சர்களைப் புறக்கணித்தது ஏன் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் சுவேந்து அதிகாரிக்கு ஏன் வாழ்த்துத் தெரிவிக்கப்படவில்லை?
அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு ஏன் இத்தகைய வாழ்த்துச் செய்தி அனுப்பப்படவில்லை?
இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியாகச் செயற்படும் போது, ஒரு குறிப்பிட்ட மாநிலத் தலைவருக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது ஏனைய மாநிலங்களுடனான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
