🔴 VIDEO வீழ்ந்த இடத்திலிருந்து மீண்டெழும் தமிழரின் குரல்: இணையத்தை உலுக்கும் “செங்கோல்” பாடல்!

“எதற்காக எங்களை அழிக்க நினைத்தார்களோ, எதை எம்மிடம் இருந்து பறிக்க நினைத்தார்களோ… அந்நிலைக்கு, அவ் உயரத்திற்கு மீண்டும் வருவது தான் உண்மையான வெற்றி!” என்ற ஆழமான கருத்தாக்கத்துடன், ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கி வெளியாகியுள்ளது “செங்கோல்” இசைப் பாடல்.

அரசியல் அடக்குமுறைகள், கல்விப் புறக்கணிப்புகள் மற்றும் பொருளாதார அழிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சமூகம், எவ்வாறு அறிவு, வணிகம் மற்றும் உலகளாவிய ஆளுமையின் மூலம் மீண்டும் தன் உச்சத்தை அடைய வேண்டும் என்ற செய்தியை இப்பாடல் உரக்கச் சொல்கிறது.

இப்பாடலின் வரிகள் வெறும் கற்பனையல்ல; அவை ஈழத்தமிழினம் கடந்து வந்த முள் நிறைந்த பாதையின் சாட்சிகள்.

1956 – ‘சிங்களம் மட்டும்’ சட்டம் (Only Sinhala Act): உயர் பதவிகளில் இருந்த பல தமிழர்களின் அரசாங்க உத்தியோகம் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் சிதைக்கப்பட்ட புள்ளி.

1972 – தரப்படுத்தல் முறை (Quota System): தகுதியும் உயர் புள்ளிப் பெறுபேறுகளும் இருந்தும், தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழகக் கனவுகள் படுகுழிக்குள் தள்ளப்பட்ட அநீதி.

1981 – யாழ் பொது நூலக எரிப்பு: தமிழர்களின் அறிவுப் பொக்கிஷங்களையும் கலாசாரத்தையும் அழிக்கும் நோக்கில் நிகழ்த்தப்பட்ட வக்கிரத்தின் உச்சம்.

1983 – கறுப்பு जुलை (Black July): கொழும்பின் பொருளாதாரத் தூண்களாகத் திகழ்ந்த தமிழ் வர்த்தகர்களின் வணிகமும் வாழ்வும் ஒட்டுமொத்தமாகச் சாம்பலாக்கப்பட்ட கொடூரம்.

கல்வி, பொருளாதாரம், இலக்கியச் செழுமை என அனைத்துத் துறைகளிலும் தமிழர்கள் உன்னத நிலையில் இருந்ததே அன்றைய ஆட்சியாளர்களின் வக்கிர எண்ணத்திற்குத் தீனியானது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ் இனப்படுகொலையும் அரங்கேறியது என்பதை இப்பாடல் நினைவூட்டுகிறது.

வரலாற்றுப் பேரழிவுகளுக்குப் பின்னும், சாம்பலில் இருந்து எழும் பின்ஃசு (Phoenix) பறவையாகத் தமிழினம் மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்பதை “செங்கோல்” பாடல் மிக நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளது.

வரிகளும் இசையும்: மகி SR-ன் வரிகள் ஒவ்வொன்றும் உணர்வோடும் உண்மையோடும் எழுதப்பட்டிருக்க, அதற்குத் தன் குரலாலும் இசையாலும் உயிர் கொடுத்திருக்கிறார் தேவ ராகவ்.

சர்வதேசப் பார்வை: இப்பாடலின் செய்தியை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் பொது மொழியான ஆங்கிலத்தில், ருதன் எழுதிப் பாடியுள்ள Rap பகுதி பாடலுக்கு கூடுதல் மெருகூட்டியுள்ளது.

பாடலின் ஆகச்சிறந்த சிறப்பம்சமாக, AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தின் உதவியுடன் பழைய வரலாற்று நினைவுகளைக் கண்முன்னே கொண்டு வரும் வகையில் இதன் காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.

“அழிவுகளைப் பேசி அழுவதோடு நம் கடமை முடிந்துவிடுவதில்லை. எதை நம்மிடம் இருந்து பறித்தார்களோ, அதை விடப் பல மடங்கு உயரிய நிலையை நாம் மீண்டும் அடைய வேண்டும். நாம் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் தேர்ச்சி பெற்று, உலகளவில் சாதனையாளர்களாக ஒன்றிணைய வேண்டும்” என்பதே இப்பாடலின் வழியே படைப்பாளிகள் கடத்த நினைக்கும் முக்கிய செய்தியாகும்.

தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் “செங்கோல்” பாடல், உலகத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவதோடு, மீண்டெழுதலுக்கான புதிய உத்வேகத்தையும் விதைத்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

batticaloa
மட்டக்களப்பில் பரபரப்பு: மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதி!
weather alert srilanka
தீவிரம் அடையும் சீரற்ற வானிலை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு
basil
பசில் ராஜபக்சவுடையது என கூறப்பட்ட மல்வானை வீடு மாணவர்களால் சுற்றிவளைப்பு!
tvk
21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்க தடை: தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
india
தமிழக சட்டசபை தேர்தல்: வாக்களித்த இலங்கையர் உள்ளிட்ட மூவர் மீது சட்ட நடவடிக்கை
vijay tvk
முதலமைச்சர் விஜய் நெற்றியில் உள்ள கறுப்பு திலகம்: இதன் பின்னணியில் உள்ள ரகசியம்