இன்றையதினம் இடம்பெற்ற மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினரான லோ.ரமணன் செம்மணி உட்பட ஏனைய இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான வினோத் தனு “இது தேவையற்ற விடயம். இந்த விடயம் இதில் கதைக்கப்பட தேவையில்லை. இந்த இனப்படுகொலை 1983ஆம் ஆண்டு சஜித் பிரேமதாசவினால் தான் நடாத்தப்பட்டது. நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக இந்த விடயம் பேசப்பட்டது” என்றார்.
இதன்போது குறுக்கிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான செ.ஞானரூபன் “ரமணனின் தாய் கட்சிதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். அவரை ஏன் கதைக்க அனுமதித்தீர்கள்” என கூறினார். இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் உட்பட அனைவரும் மௌனம் காத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தவிசாளர், “ஒருவர் வெளிநடப்பு செய்யும்போது அதற்கான காரணத்தை கூறிவிட்டு வெளிநடப்பு செய்யலாம். அது அவரது உரிமை. அதற்கு அனுமதி வழங்க வேண்டிய தேவை இல்லை. அவர் இல்லாத இடத்தில் அவர் தொடர்பான விடயங்களை பேசுவது ஆரோக்கியமானது அல்ல. எனவே அவர் சபைக்கு வந்த பின்னர், அந்த விடயங்கள் பேசப்படும்போது அதுகுறித்து பேசலாம் என்றார்.