ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்காவால் மிக எளிதாகத் திறக்க முடியும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

‘Truth Social பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இன்னும் சிறிது காலம் கிடைத்தால் இந்த இலக்கை எட்ட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் தனது பதிவில் கூறியுள்ளதாவது, “இன்னும் கொஞ்சம் காலம் கிடைத்தால், நம்மால் மிக எளிதாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க முடியும்.
அங்கிருக்கும் எண்ணெயைக் கைப்பற்றி, அதன் மூலம் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்க முடியும். இது உலகிற்கே ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக அமையும்” என குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிகவும் முக்கியமான இந்த கடல் வழித்தடத்தைத் திறப்பது குறித்து ட்ரம்ப் தொடர்ச்சியாகப் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
குறிப்பாக, மேற்கத்தேய நாடுகள் தங்களது எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்த இராணுவ ரீதியான பலத்தைப் பிரயோகித்து இந்த வழித்தடத்தைப் பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகின்றார்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் உலகளவில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், ட்ரம்பின் இந்த “எண்ணெயைக் கைப்பற்றும்” கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
